'முடங்கிப் போடும் மூட்டு வலி' காரணங்களும் தீர்வுகளும் - நூல் அறிமுகம்.
வயது மூப்பு என்பது வரமாக இருந்த காலம் மலையேறி வருகிறது. நாகரீக உலகில் வாழ்தல் என்பதே சுமையாக மாறியுள்ளது. 30 வயது கடந்து விட்டால் மூட்டுக்கு முட்டு வலி வாழ்வை ரணமாக்கி விடுகிறது. சூழலும் நமது உணவுப் பழக்கமும் வயோதிகத்தை இளமையிலேயே வரவழைத்து விடுகிறது. முன்னோர்கள் போற்றி வழங்கிய உடல் நலம் சார்ந்த முறைகளை முற்றிலும் மறந்துவிட்டு அவசர வாழ்வியலில் சிக்கி அவதிப்பட்டு வாழ்கிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான சிக்கலாக மூட்டு வலி மாறி இருக்கிறது. தலை முதல் பாதம் வரை உடலை இணைத்தும் இயங்கியும் வரும் மூட்டுகள் முடிவில்லா வலியை நமக்கு தரும் பொழுது வழி தேடி அலைகிறோம். பதினோரு தலைப்புகளில் நமது பண்பாடு தொடங்கி மூட்டு வலியால் முடங்கிப் போகாமல் நீண்ட நாள் வாழ்ந்திட வாழ்த்து கூறுகிறது இந்த புத்தகம். எலும்பு முட நீக்கியல் சிறப்பு மருத்துவர் துரை நீலகண்டன் அவர்களின் படைப்புதான் இந்த நூல். இரண்டாவது பதிப்பை இன்னும் மெருகேற்றி தந்திருக்கிறார். பக்கத்துக்கு பக்கம் படங்களோடு பாடம் நடத்துகிறார். உட்காருவது, நடப்பது, சுமை தூக்குவது, வாகனங்களை ஓட்டுவது என வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வையும் க